கொங்குநாட்டு வரலாறு
  வரலாறு
 
கொங்கு நாடு ஒரு முன்னோட்டம் :

நம் செந்தமிழ் நாடு, சேர சோழ பாண்டிய நாடுகளைப் போலவே தொண்டை நாடு கொங்கு நாடு என்ற இரண்டு தனிப் பிரிவுகளை பழங்காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்தது.

கொங்கு நாடு தனக்கென்று எப்பொழுதும் தனியான எல்லைகள், வரலாறு, கலை, பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம், ஆகியவைகளைக் கொண்டது. இதனைப் பழங்கால இலக்கியங்களும், கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன. நீலகிரி, கோவை, பெரியார், கரூர், சேலம், தருமபிரி மாவட்டங்களில் சில பகுதிகளும், திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளும் கொங்கு நாடாகும்.

“ வடக்கே பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பெருப்புவெள்ளிக் கன்று – கிடக்கும்
களித்தண் டலைமேவும் காவிரிசூழ் நாடு
குளித்தண் டலையளவும் கொங்கு”

-என்பது தனிப்பாடல், கொங்கு நாட்டு எல்லை கூறும் எல்லாப் பாடல்களுமே வெள்ளியங்கிரி மலையை மேற்கு எல்லையாகக் கூறுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு தெற்கே சேரநாடு என்பது இதன் கருத்தாகும்.

அதனால் தான் தொண்டை நாடு, கொங்கு நாடு ஆகியவைகளைச் சேர்த்துத் தமிழ்நாடு ஐந்து என்ற கருத்து முன்பே இருந்தது, தண்டியலங்காரம் என்னும் நூலின் மிகப் பழமையான மேற்கோள் பாடல் ஒன்று,

“வியன் தமிழ்நாடு ஐந்து”

-என்று கூறுகிறது. சைவ சமய நூல்களில் மிகத் தொன்மையானதாகக் கருதப்படுகின்ற திருமந்திரம்.

“தமிழ் மண்டலம் ஐந்து”

-என்று தமிழ் நாட்டின் ஐந்து பிரிவுகளைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே கொங்குநாடு தனிப்பிரிவு என்பது இவற்றால் புலப்படுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் பலரும் இக்கருத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.

சங்க இலக்கியத்தில் பல இடங்களில் கொங்கு நாடு தனி நாடாகவே குறிக்கப்படுகிறது. இந்நாட்டு மக்கள் கொங்கர் என்று சங்கப்பாடல்களில் கொங்கின் குறுநில மன்னர்கள் பலர் தனியாகக் குறிக்கப் பெறுவதுடன் கொங்கு நாட்டின் கால்நடைச் செல்வம், ஆழ்கிணறு, தண்ணீர்ப் பற்றாக்குறை, கொங்கரின் உழைப்பு, அவர்தம் போர்திறன் ஆகியவை பல்வேறு இடங்களில் பரக்கப் பேசப்படுகின்றன. மேலும் கொங்கு நாட்டு மணிகள், வண்ணகற்கள் வேலைப்பாடு மிக்க அணிகலன்கள் புகழ்ந்து பாராட்டப் பெறுகின்றன.

சேரன் செங்குட்டுவன், தனக்குச் சமமான அரசனாகக் கொங்கு நாட்டு இளங்ககோசரை தமிழ் நாட்டு மூவேந்தருக்கு ஒப்ப மதித்துப் போற்றியிருக்கின்றான் நூற்றுவர் கன்னர், இலங்கைக் கயவாகு மாளுவவேந்தர், சோழன் பெருங்கிள்ளி ஆகியோர் போலக் கொங்கு நாட்டு மன்னனையும் நட்பாகக் கொண்டிருக்கின்றான், இதனைச் சிலப்பதிகாரத்தின் மூலம் அறிகின்றோம்.

பேரூரை “மேற்குக் கொங்கு” என்று பாண்டியன் பழஞ்செப்பேடும் இலக்கியங்களும் கூறுவது கொங்கு நாடு தனி நாடு என்பதாலேயேயாகும், கொங்கு நாட்டிலிருந்து சமய அடியார்கள் சேரநாடு நோக்கிச் சென்றதை

“கொங்குநாடு கடந்துபோய்க் குலவுமலை நாட்டு எல்லையுற”
“மலைநாடு கடந்தருளி.... திருமுருகன் பூண்டிவழிச் செல்கின்றார்”

-என்று பெரியபுராணம் குறிப்பிடும். சிலப்பதிகாரத்திலும் கொங்கின் மேற்குப்பகுதி அரசர் குறிக்கப்பெறுகின்றார்.

நூற்றாண்டுகள் தோறும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கொங்கு நாடு தனி நாடெனக் கூறுகின்றன. சிலர் தொண்டை காட்டைச் சோழ நாட்டுடனும் கொங்கு நாட்டைச் சேரநாட்டுடனும் அடக்குவர், அது பொருந்தாது என்பது மேற்கண்ட சான்றுகளால் விளக்கும்.

‘கொங்கு நீ வரலாறு’ எழுதிய கோவைக் கிழார் தன் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“சோழர்கள், ஓயசளர், விசய நகரத்தார், மைசூர் மன்னர்கள் ஆகிய வம்சத்தாரிடம் கொங்கு நாடு சென்றது.இக்காலங்களிலெல்லாம் வெவ்வேறு இராச்சியங்களுடன் கொங்கு நாடு இணைக்கப்பட்ட போதிலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை இந்நாடு இழக்கவில்லை. இந்நாட்டின் அமைப்பு மாத்திரம் அன்றி இந்நாட்டுக் குடிகளின் பழக்க வழக்கங்களும் பண்டைக்காலம் தொட்டு ஒரே விதமாக இருந்து வந்தன, சமூக வழக்கங்களிலும் ஏனைய நாட்டார்களிடமிருந்து சிறிது வேறுபட்டேயிருக்கும். இவ்விதக் காரணங்களினால் கொங்கு நாட்டைத் தனிநாடு என்று நிச்சயிக்ககூடும்” வராகமிகிரர் தன் நூலில் கொங்கு நாடு என்று குறிக்கின்றார்.

அசோகன் கி.மு. 278-232 கல்வெட்டிலும் தனி அரசாகக் குறிக்கப்பெறும் சதியபுத்திரர் கொங்கு நாட்டு மன்னன் அதியமானே என்பது ஜம்பைக் கல்வெட்டால் உறுதிப்படுகிறது.

' கொங்குநாடு ' என்னும் வரலாற்று நூலில் புலவர் குழந்தை பின்வறுமாறு குறிக்கின்றார்.

“… தொன்று தொட்டே கொங்கு நாடு சேர சோழ பாண்டியர்களாகி. முடியுடை மூவேந்தராட்சிக்கு உட்படாது தனியாட்சி நாடாகவே இருந்து வந்தது. வேளிர் எனும் சிறப்புப் பெயருடைய வேளாண்குடிச் செல்வராகிய கொங்கு நாட்டுத் தனி அரசர்கள் தமக்குள் பகையின்றி ஆண்டு வந்தனர். அவர்கள் முடியுடை மூவேந்தரிடத்தும் அன்போடு, பண்பும் அமைவும் உடையவராக இருந்து வந்தனர். முடியுடை மூவேந்தர்க்கும் மைத்துனரும் மாமனாரும் ஆகிய அவர்கள் பின்னர் எவ்வாறு இருந்திருப்பர். கேரளோற்பத்தி, கேரள மான்மியம் போன்ற நூல்களும், திருவாங்கூர்ச் சரித்திர ஆசிரியர் சங்குண்ணி மேனன் இவர்களும், டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்களும் கொங்கு தனியாட்சி நாடு என்பதைத் தக்க எடுத்துக் காட்டுகள் காட்டி நிறுவியுள்ளனர்”.

தொல்பொருட் சிறப்பும், கல்வெட்டுப் பரப்பும், சிற்பச்செல்வமும், வரலாற்றுப் பெருமையும் உடையது நமது கொங்குநாடு.
 
  Today, there have been 1 visitors (4 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free